Tuesday, February 4, 2014

தமிழர் இரத்தத்தால் தோய்ந்த தேசத்தின் சுதந்திர தினத்தை கொண்டாடும் சிங்கள மக்களுக்கு....!

சிறீலங்கா தேசத்தின் சுதந்திர தினத்தை கொண்டாடும் சிங்கள மக்களுக்கு தமிழீழ மகனின் கடிதம், அறுபத்திஆறாவது சுதந்திரதின கொண்டாட்டங்களில் மூழ்கிப்போய் இருக்கும் சிங்கள தேசத்தவனே உன் பக்கத்து தேசத்தவனின் மடல் இது. 




வாழேந்திய சிங்கக் கொடியை தூக்கி ஆட்டுவதில் காட்டும் களிப்பை கொஞ்சம் குறைத்து இந்த மடலை படிப்பாய் என்றே நம்புகிறேன்.


ஜெயவேவா சத்ததையும் கொஞ்சம் குறை.. அப்போதுதான் எல்லாம் புரியும் உனக்கு. உயிரினங்கள் அனைத்தும் பிரியமான- மிகமிக விருப்பமான ஒரு சொல் இருக்குமாக இருந்தால் அதுதான் “சுதந்திரம்'' விடுதலை” என்பன.


உன் தேச சுதந்திரத்தை கொண்டாடிக் கொண்டிருப்பாய். காலிமுகக் கடற்கரையில் உன் முப்படைகளையும் கொண்டு நிலமதிர அணிவகுப்பிடு. கறுப்புகண்ணாடியும் சிவப்பு தோள் துண்டும் அணிந்த உன் தேசத்து அதிபர் உரைக்கு கைதட்டு.


யாரிடமோ திருவோடு ஏந்தி வாங்கி குவித்து வைத்திருக்கும் ஆயுதங்களின் பளபளப்பில் துட்டகைமுனுவை நினைவிருத்து. இது எல்லாம் செய்.


உன் சிங்களதேச சுதந்திர தினம். அதில் என்ன கூத்ததடித்தாலும் எமக்கு குறைவேதும் இல்லை- குற்றமும் இல்லை.  ஆனால்,உன் பக்கத்து தேசமான தமிழீழமெங்கும் இராணுவ முற்றுகைகளுக்குள்ளேயே எப்போதும் இருக்க வேண்டும் என்று நீ விரும்பிக் கொண்டிருக்கிறாய் பார், அதுதான் எம்மால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதது.


ஆனால் நீ தென்னிலங்கையில் ஏற்றும் அதே சிங்ககொடிதான் தமிழர் மண்ணிலும் ஏறியே ஆகவேண்டும் என்று நீ அடம்பிடிக்கிறாய் பார் அதுதான் எம்மால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை- ஒருபோதும்.


இன்று நீ சுதந்திரதினமாக கொண்டாடும் இந்த நாள் எமது வரலாற்றிலும் முக்கியமானது தெரியுமா.. ?


இந்த நாளில் (04 பெப்) இருந்து தான் தமிழர்கள் மீதான இனப்படுகொலை ஆரம்பித்தது.  இந்த நூற்றாண்டின் மிகவும் கொடிய குரூரமான இனப்படுகொலையை எம்மீது நடாத்தி விட்டு ஒன்றுமே நடைபெறாதது போல் சிங்கள தேசமக்கள் நடப்பதைத்தான் எம்மால் ஜீரணிக்க முடியவில்லை.


லட்சக்கணக்கான தமிழர்களை கொன்றுபுதைத்து, சிதைத்து எரித்ததன் குறியீடாக தமிழர்கள் பெருஞ் சோகத்துடன் நினைவுகொள்ளும் மே18 என்பதை வெற்றி நாளாக குதூகலிக்கும் சிங்கள தேசத்தின் சுதந்திர தினத்தை உண்மையாகவே நாம் வெறுப்புடனும் வன்மத்துடனுமே பார்க்கிறோம்-  அதனால்தான் இந்த நாளை நாம் கரிநாளாக, துக்கநாளாக, எமக்கு இழைக்கப்பட்ட ஓரவஞ்சனையின் நாளாக நினைக்கின்றோம்.


உனக்கு தெரியுமா...எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே இ.ந்த நாளை நாங்கள் எவரும் மனம் ஒத்து கொண்டாடியதில்லை என்று.


எரிந்தும் கரிகியும் கிடந்த சிங்கக் கொடிகள்தான் என் வீதிகளில் கிடக்கமுடியும் என்பதில் இருந்தே ஒன்று புரியவில்லையா உனக்கு.


சிங்கள தேசத்தின் சிங்கக் கொடி தமிழர் தாயகத்தில் ஆயுதபடைகளின் துணையின்றி ஒருநிமிசம் கூட பறக்கமுடியாது என்ற யதார்த்தத்தை நீ ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறாய் என்று தெரியவில்லை.


கொஞ்சம் வரலாற்றை பின்னோக்கி பார்....


முதலில் ஒன்று உனக்கு தெரியுமா...எங்களின் தாயக இறைமை ஒருபோதும் நாம் சிங்கள இனத்திடம் ஒப்படைத்ததே இல்லை.அது ஐரோப்பிய காலனி ஆதிக்க கடவுள்கள் செய்தவினை.


ஐரோப்பியர் இந்த தீவுக்கு வந்தபோது இங்கு ஒன்றும் சிங்கள ராஜ்யமே முழுவதும் இருந்ததில்லை.


அந்த காலம் உலகம் முழுதும் இருந்த ஆட்சிமுறையான மன்னர் ஆட்சியில் நீங்கள் சிங்கள மன்னர்களாலும், நாங்கள் எமது மொழிபேசும் தமிழ் மன்னர்களாலுமே ஆளப்பட்டு வந்தோம். ஒரு தீவுக்குள் இரண்டு தேசங்கள்.


1619ல் போத்துகீசர்கள் சங்கிலியனை வென்றபோதும்கூட எமது தமிழ்த் தேச இறைமை அவர்களிடம் இலகுவாக வீழ்ந்துவிடவில்லை.


வருணகுலத்தான் போன்றவர்கள் தஞ்சை நாயக்க மன்னர்களிடம் இருந்து உதவி பெற்று தமிழ்தேச இறைமையை தக்க வைப்பதற்காக போரிட்ட வரலாறுகளும், அதன்பின்னர் பண்டார வன்னியன் போரிட்ட வரலாறுகளும் எமக்கும் உண்டு.


தமது நிர்வாக வசதிக்காக இந்த தீவு முழுதையும் ஒன்றாக்கிய ஆங்கிலேயர் தாம் வெளியேறும்போது அதனை உங்களிடம் ஒப்படைத்து சென்ற வரலாற்று துரோகத்தால் தான் நானும் நீயும் ரத்தம் சிந்துகின்றோம் தெரியுமா.. 


இலங்கைதீவின் சுதந்திரத்துக்காக உன் முப்பாட்டனும், பாட்டனும் போரிடாவில்லை தமழரின் போராட்டத்தால் போகிற போக்கில் பக்கிம்காம் அரசி தூக்கி எறிந்த சுதந்திர பிச்சை உன் சிங்கள தலைவர்களின் திருவோட்டில் விழுந்ததுதான் இன்றைய பிரச்சனைகளுக்கு கால்.


அதுவரை  பதுங்கி இருந்த சிங்கள பேரினவாத பேய் 04.02.48க்கு பின்னரே வெளிவந்து விசுவரூபமெடுத்து விசரெடுத்து ஆடத்தொடங்கியது.


உன் மூளையின் ஒவ்வொரு திசுக்களிலும் மகாவம்ச கனவை ஊட்டியும் ஊற்றியும் வளர்த்தெடுத்த சிங்கள பேரினவாதம் தமிழர்களை அடக்கி ஆள்வதுதான் சிங்கள இனத்தின் இருத்தலுக்கு மிகமுக்கியம் என்ற சேதியை எப்படியோ பதியம் போட்டுள்ளது.


நீயும் யார் தமிழர்களை அதிகமாக அழிக்கிறார்களோ அவர்களையே வாக்களித்து தெரிவுசெய்து பேரினவாத சேற்றுக்குள் சங்கமித்தாய்.


தமிழர்கள் தொடர்ச்சியாக அடக்கப்படுவதும் அழிக்கப்படுவதும் உனக்கு உறைக்காமல் விட்டாலும் எமக்கு உறைத்தது. அதனாலேயே எமக்கே உரித்தான எம் தாய்மண்ணில் எம் சுயநிர்ணய உரிமையை நிலைநாட்ட எழுந்தோம்.விடுதலைக்கான எழுச்சியானது அது.


எல்லா அடக்குமுறைகளும் ஒடுக்குதல்களும் எவ்வளவு வலிகளை தந்தாலும் வரலாறு அதில் இருந்து விடுதலை ஆக ஒரு சக்தியை வழங்கும் என்பது பொது விதி அல்லவா...


எமக்கும் ஒரு தலைவன் கிடைத்தான்.யாருக்குமே கிடைக்காத ஒரு நேர்மையான உண்மையான வழிகாட்டி ஒருவன் கிடைத்தான்.


முப்பதாண்டுகள் அவன் நடாத்திய உன்னதமான போராட்டம் சிங்கள மகனே உனக்கு எத்தனை சேதி சொல்லியும் நீ இன்னும் அதிலிருந்து கற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் வரலாற்று சோகம் போ.


உதாரணத்துக்கு ஒன்று, சிங்கள பேரினவாத ஆட்சி மையத்தில் இருந்து நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் களத்தை திறந்தது சிங்களம்.ஆனால் தமிழர் போராட்டம் சிங்கள பேரினவாத ஆட்சிமையத்தின் மூளை மடிப்புகளுக்குள்ளும் அதிர்வுகளை பொறிகளை உருவாக்கி சிங்களம் முழுதையும் அச்சத்தில் வைத்திருந்த காலத்தை எப்படித்தான் அத்தனை சுலபமாக மறந்தாயோ தெரியவில்லை.


தமிழர்களுக்கான சுதந்திரம்தான் சிங்களமக்களுக்கான உண்மையான சுதந்திரமாக இருக்கமுடியும் என்று எங்கள் தேசியதலைவன் சொன்னதன் அர்த்தத்தை நீ எப்படி புரிந்து கொண்டாயோ தெரியவில்லை...


ஒரே தீவுக்குள் இன்னொரு தேசத்தை அடிமையாக அடக்கி வைத்திருக்கும் வரைக்கும் உண்மையான சுதந்திரத்தினை சிங்களமக்களும் அனுபவிக்க முடியாது என்பதுதான் முப்பதாண்டு போராட்டம் சிங்கள இனத்துக்கு சொல்லிய வரலாறு.


வரலாற்றில் எப்போதாவது அரிதாக நிகழும் போர்க்கள வாய்ப்பு, துரோகத்தின் கூட்டு, மேலாதிக்க ஒத்துழைப்பு, சர்வதேச ஒத்துழைப்பு என்பன ஒன்றாக இணைந்ததால் கிடைத்த தற்காலிக வெற்றியையே முழுமையானதாக, நிரந்தரமானதாக எண்ணிக் கொண்டிருக்கும் சிங்களமகனே,


அந்த பெரும் இனவழிப்பு நாட்களான 2009 மே 18ல் கூட எமது போரிடும்வலு,ஆளணி,தளபாடங்கள் என்பனவற்றை இழந்திருக்கிறோம் உண்மைதான். ஆனால் தமிழர் தாயக இறைமை என்பதை எந்தவொரு இடத்திலும் உங்களிடம் சரணாகதி வைக்கப்படவில்லை.


எல்லா காலங்களிலும் வரலாறு அடக்குமுறையாளனுக்கு சாதகமாவே இருந்தது கிடையாது.  அடக்கப்பட்ட மக்களும் எப்போதும் தூங்கிக் கிடப்பார்கள் என்பதும் கிடையாது. சிங்கள தேச சுதந்திரநாளுக்காக சிங்கக் கொடியை ஆட்டியபடியே கூவிக்குதூகலிக்கும் சிங்களகுடிமகனே,


கொஞ்சம் நிதானமாக சிந்தித்து பார். யாரோ கண்படிப் பிரபுத்துவ பண்டாரநாயகாக்களுக்காகவும், சேனநாயக்காகளுக்காகவும், ராஜபக்சே குடும்பத்துக்காகவும் நீ ஆயுதம் ஏந்தி எம் மண்ணில் இன்னும் எத்தனை காலம்தான் நிலைகொண்டு நிற்கபோகிறாய்....


உலக வரலாறுகளை புரட்டிப்பார்.


உலகம் முழுதும் சூரியனே அஸ்தமிக்காத சாம்ராஜ்யத்தை வைத்திருந்த சக்ரவர்த்தினி பக்கத்து நாடாக இருந்த போதிலும் எழுந்தார்களே அயர்லாந்தின் தான்பிரின்கள் அவர்கள் எப்படி எழுந்தார்கள் என்பதையும்,


மேலும் உலகமுழுதும் எழுச்சி கொண்ட மக்களின் வரலாறுகளையும் புரட்டிப்பார் ... ஏன் அதிகதூரம் போகிறாய்.. உன் பக்கத்திலேயே..மிக பக்கத்திலேயே பார்.


உன் சிங்கள தேச தலைநகரின் நீதிமன்றிலேயே “தமிழீழ தேசத்தவர்களான எம்மை விசாரிக்க சிங்கள தேசத்துக்கு உரிமை இல்லை” என்று எம் விடுதலை வீரர்கள் முழங்கினார்களே அப்போதே தெரியவில்லையா நீ வேறுதேசம் நாம் வேறுதேசம் என்று..


பொன்னம்பலம் ராமநாதன்களை கண்டுபழகி போட்ட கணக்கால் தமிழர்கள் சலுகைகளையே யாசிப்பர், போரிடவே மாட்டார்கள் என்ற கனவுடன் தூங்கிக்கிடந்த சிங்கள பேரினவாத கனவுகலைத்து யதார்த்தத்தை தீயாக பொசுக்கி புரியவைக்க ஒருவன் பிறப்பான் என்பதை சேனநாயகாவும் பண்டாவும் ஒருபோதும் கனவுகூட கண்டிருக்கமாட்டார்கள்தான்.


ஆனால் நடந்தது என்ன என்பதை நீ உன் கண்ணாலே கண்டும் கேட்டும் இருப்பாய். எனவே இப்போதே ஆதிக்க எண்ணம் கலை.உனக்கு இருக்கும் சுதந்திரதேசம் போல ஒன்று தமிழர்களுக்கும் இருக்கு என்ற யதார்த்தம் புரி.


உன்மீது சவாரி செய்யும் சிங்கள ராஜபக்சேகளை தூக்கி எறி.


மீண்டும் சொல்கிறேன்....எங்களின் தேசியதலைவன் சொன்னதுபோல தமிழர்களின் சுதந்திரம்தான் சிங்கள மக்களுக்கான உண்மையான சுதந்திரமாக இருக்கமுடியும் என்பதன் அர்த்தத்தை புரிந்துகொள்.


இந்த தீவில் நிரந்தர சமாதானமும் சுபீட்சமும் பொங்க அதுவே முடிவாகும். அதுவரை உன் சுதந்திரநாள் எமக்கு துக்கநாள்தான்.உன் சுதந்திர நாளை எம்மீதான இனப்படுகொலை ஆரம்பித்த நாளாகவே பார்ப்போம்.

நன்றி!
தமிழ்வின்!

சந்திப்போம்...

தமிழீழமகன்
ச.ச.முத்து
ilamparavai@hotmail.com

No comments:

Post a Comment