
ராமேஸ்வரத்தில் இருந்து நேற்றுமுன்தினம் காலை 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டி அடித்தனர். பத்துக்கும் மேற்பட்ட படகுகளில் இருந்த மீன்பிடி வலைகள் மற்றும் உபகரணங்களை அறுத்து சேதப்படுத்தினர்.
இலங்கை கடற்படையினர் தாக்கியதில் தங்கச்சிமடத்தை சேர்ந்த அலங்காரம் என்பவருக்கு சொந்தமான படகில் பலகை உடைந்து கடும் சேதம் அடைந்தது. அத்துடன் படகை ஓட்டிக் கொண்டு வந்த போது, நடுக்கடலில் படகு மூழ்கியது. இதில் வந்த 4 மீனவர்கள் கடலில் குதித்து மற்ற படகுகளில் ஏறி உயிர் தப்பினர். இந்த சம்பவம் ராமேஸ்வரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மண்டபத்தைச் சேர்ந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். இதேபோல், புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மூன்று படகுகளும் அதிலிருந்து 11 மீனவர்களும் சிறைபிடிக்கப்பட்டனர். இவர்கள் இலங்கை காங்கேசன் கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
நேற்று கோர்ட் விடுமுறை என்பதால் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என தெரிகிறது.தமிழக, இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தைக்கு பின்னர் அமைதி திரும்பும் என எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில் இலங்கை கடற்படையினரின் தாக்குதல் மற்றும் சிறை பிடிப்பு சம்பவங்கள் மீனவர்கள் மத்தியில் அச்சத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மீனவர் சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
நாடு திரும்பிய 15 மீனவர்கள்
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றம் மூலம் விடுவிக்கப்பட்ட பாம்பன் மீனவர்கள் 15 பேர் நேற்று தூத்துக்குடி வந்தனர்.இந்திய கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த, தமிழக மீனவர்களை அத்துமீறியதாக கூறி இலங்கை கடற்படையினர் கடந்த மாதம் 2ம் தேதி பாம்பன் பகுதி மீனவர்கள் 15 பேரை கைது செய்து, அந்நாட்டு சிறையில் அடைத்தனர்.
அவர்களை அங்குள்ள நீதிமன்றம் விடுதலை செய்தது.இதைத் தொடர்ந்து, 15 பேரையும் இலங்கை கடற்படையினர் சர்வதேச கடல் எல்லையில் காத்திருந்த இந்திய கடலோர காவல் படையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவர்கள் நேற்று தூத்துக்குடி அழைத்து வரப்பட்டனர். அவர்களை அமைச்சர்கள் ஜெயபால், சண்முகநாதன், கலெக்டர் ரவிக்குமார் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின்னர், 15 பேரும் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment