Sunday, February 9, 2014

தலையாழி பகுதியில் ஆயுதங்களுடன் நடமாடியவர்கள் படையினரே!

யாழ்.கொக்குவில் தலையாழி பகுதியில் வாள் மற்றும் சில ஆயுதங்களுடன் நடமாடியவர்கள் படையினரே என வட்டுக்கோட்டைப் பொலிஸார் உறுதிப்படுத்தியிருப்பதுடன், அவர்கள் என்ன நோக்கத்திற்காக அவ்வாறு ஆயுதங்களுடன் நடமாடினார்கள் என்பது தொடர்பான விசாரணைகளை தாம் தொடர்ந்தும் மேற்கொண்டிருப்பதாக தெரிவித்திருக்கின்றனர்.



நேற்றய தினம் தலையாழி பகுதியிலுள்ள ஆலயத்தின் மண்டபத்தில் படையினரின் சீருடையில் வாள் மற்றும் கம்பிகள் போன்றவற்றுடன் படையினரின் சீருடையில் சில நபர்கள் நடமாடியதுடன், மண்டபத்தில் நீண்டநேரம் அவர்கள் அமர்ந்திருந்துள்ளனர்.


இந்நிலையில் விடயம் தொடர்பாக பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து யாழ்.குடாநாட்டில் சிறப்பு நடவடிக்கைகளுக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ள,வட்டுக்கோட்டைப் பொலிஸார் இவர்களை கைதுசெய்திருந்தனர்.


முன்னதாக இவர்கள் படையினரின் சீருடையில் நடமாடிய கொள்ளையர்கள் என்ற தகவலை பொலிஸார் தெரிவித்திருந்தனர்.


இந்நிலையில் கைதுசெய்யப்பட்டவர்கள் படையினரே என இன்றைய தினம் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.


எனினும் அவர்களுடைய பெயர் விபரங்கள், எந்தப் படைப்பிரிவைச் சேர்ந்தவர்கள் போன்ற தகவல்களை வெளியிடுவதற்கு பொலிஸார் மறுப்புத் தெரிவித்துள்ளதுடன், அவர்கள் என்ன நோக்கத்திற்காக வாள்களுடன் நடமாடினர் என்ற விடயம் தொட்பான விசாரணைகளை தாம் முன்னெடுத்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment